பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்


 பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்


(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை: 

இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்:

ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் 'இந்த ஹதீஸ் பலவீனமானது' என்று கூறியதாக, திர்மிதீ இமாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் 'யஹ்யா இப்னு அபீ கஸீர்' என்பவர் 'உர்வா' என்பவரிடம் இந்த ஹதீஸை செவியுற்றதாக சொல்கிறார். ஆனால் 'உண்மையில் யஹ்யா என்பவர் உர்வாவிடம் கேட்டதில்லை' என்று இமாம் புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் 'ஹஜ்ஜாஜ்' என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் கேட்டதாக சொல்கிறார். ஆனால், 'ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் செவியுற்றதில்லை' என்று இமாம் புகாரி (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள். எனவே திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பலவீனமானது என்பதை இமாம் திர்மிதி அவர்களே, புகாரி இமாம் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்பது நமக்கு தெளிவாகிவிட்டது.

இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அவர்கள் இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருப்பது, இந்த சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? புரியும், ஆனாலும் மறைக்கிறார்கள். ஏன் தெரியுமா? திர்மிதி இமாம் அவர்களின் சொல்லை வெளிப்படுத்தினால், இவர்கள் இதுவரை மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்தது வெளிப்பட்டு விடும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே மறைத்துவருகிறார்கள். இவர்கள் அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும் அஞ்சவேண்டாமா?

அவர்களின் இரண்டாவது ஆதாரத்தைப் பார்ப்போம்:

'ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு வையுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று சுப்ஹ் நேரம் வரும்வரை கூறிக்கொண்டேயிருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி)

இந்த செய்தி இப்னுமாஜாவில் இருக்கிறது என்றாலும் இந்த செய்தியும் பலவீனமானதுதான்.இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா' என்பவர் இடம் பெறுகிறார். 'இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்' என்று இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அடுத்து 'இப்ராஹீம் பின் முஹம்மத்' என்பவரும் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர் என்ற காரணத்தினால் இஸ்லாம் கூறும் அளவுகோலின்படி இந்த செய்தியை நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

'அஸ்பஹானி' அவர்கள் தம்முடைய 'அத்தர்கீப்' என்னும் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் 'உமர் பின் மூஸா அல்வஜீஹி' என்பவர் இடம் பெறுகிறார். 'இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர்' என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.

மேலும் 'பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது (பொய்யானது)' என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது "அல்மெளலூஆத்" ("இட்டுக்கட்டப்பட்டவைகள்") எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். 'ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் இரு பித்அத்களாகும்' என இமாம் நவவி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். 'இது இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார், இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர்' என‌ இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அவர்களின் மூன்றாவது ஆதாரம்:

ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதாக இன்னொரு பலகீனமான செய்தியை எடுத்துவைக்கிறார்கள்.

இதை நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ உமாமா (ரலி) அவர்களின் மூலம் 'அபூ ஸயீத் பின்தார்' என்பவ‌ரின் வாயிலாக 'இப்னு அஸாகீர்' அவர்கள் தமது 'தரீகுத் திமஷ்க்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள 'அபூ ஸஈத் பின்தார்' என்பவரும் 'இப்ராஹீம் பின் அபீ யஹ்யா' என்பவரும் 'பொய்யர்கள்' என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வறிவிப்பு முஸ்னத் பிர்தெளஸ், பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் அனைத்துத் தொடரிலும் கோளாறுகள் காணப்படுவதாக ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும்.

அவர்களின் நான்காவது ஆதாரம்:

பராஅத் இரவு என்று சொல்லப்படும் அன்றிரவு ஓதப்படும் 3 யாசீன்களில், மரணித்தவர்களுக்காக ஒன்று ஓதுகிறோம் என்று சொல்லி அதற்கும் ஒரு செய்தியை ஆதாரமாக வைக்கிறார்கள்.

'நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் மரணித்தவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா)

மேற்கண்ட நூற்களில் இடம் பெற்றிருக்கும் இந்த செய்தியிலும் 'அபீ உஸ்மான்' என்பவரும் அவருடைய தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள். எனவே இந்த செய்தியையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு தெரியும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் இது சுட்டிக் காட்டப்பட்டும் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதில்லை.

அவர்களின் ஐந்தாவது ஆதாரம்:

"ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்". (அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ; நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9)

இந்த ஹதீஸை அறிவிக்கும் 'முஹம்மத் பின் அலீ' என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி 'முர்ஸல்' என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் 'இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள்; இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை' என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை 'நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள்' என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த 'இமாம் சுயூத்தி' ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான "அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ" ("நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்") என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஃஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் 'இப்னு அபீ முலைக்கா' அவர்கள் இவ்வாறு ஷஃஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த 'ஸியாதன் முன்கிரிய்யு' என்பவர், 'ஷஃஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும்' என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. 'என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியுற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன்' என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ‌ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஃஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் 'பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான்' என்று கூறினார்கள். நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

(2) பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப்கள் ஆதரிக்கிறதா?

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குதான் முன்னுரிமை வழங்குவார்கள். அப்படியானால், மத்ஹபு இமாம்கள் என்று கூறுகிறார்களே, அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அவர்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு காட்டமுடியாது. அதே சமயம், அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளதுதான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை குர்ஆனையும் ஹதீஸையும் விட முன்னால் வைத்து அவர்கள் போற்றும் மத்ஹபாவது ஆதரிக்கிறதா என்பதைப் பாருங்கள்:

- (ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين )

"ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும், ஷஃபான் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத்துகள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும்." (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

- (فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين )

"மக்களிடம் அறிமுகமான ஷஃஅபான் பிறை 15 ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்." (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத்ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

- (وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق)

"பராஅத் இரவு சொல்லப்படும் அன்று தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும்(அனாச்சாரமாகும் )". (ஹனபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராஹிக்; பாகம் :5 ;பக்கம் : 232)

அன்பார்ந்த‌ இஸ்லாமிய பெருமக்களே! மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு மத்ஹப்கள் ஆதாரமாகாது என்றாலும், சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் எதைதான் பின்பற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இந்த ஆதாரங்கள். இந்த ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்கிறார்களோ, அந்த மத்ஹப் புத்தகங்களில்தான் மேலே எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனை என்றைக்காவது அந்த ஆலிம்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் மத்ஹப் நூற்களிலேயே 'செய்யக் கூடாது', 'பித்அத்', 'தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம்' என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேர்ந்து அந்த ஆலிம்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மத்ஹப் நூற்களில் இவ்வாறு உள்ளது உண்மைதானா? என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், உண்மையை நிலையை உணர்வீர்கள்!

மேலும் இவர்கள், இந்த இரவை உள்ளதென்று நிரூபிப்பதற்காக‌, எப்படியெல்லாம் மக்களை மேலும் மேலும் திசை திருப்புகிறார்கள் பாருங்கள்!

'இந்த பரா அத் இரவு இல்லை', 'கொண்டாடுவது கூடாது' என்று கூறும் நம்மைப் போன்றவர்களை நோக்கி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள்:

- 'வண‌க்க வழிபாடுகளிலிருந்து மக்களைத் தடுக்கும் எண்ணத்தினால்தான், இப்படியொரு இரவு இல்லை என்று சொல்கிறார்கள்'

- 'நாம் படைக்கபட்டதே இறைவனை வணங்குவதற்காகதானே?'

- 'அந்த அன்றைக்குதான் நின்று வணங்கவேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். அப்படியானால், அந்த அன்று சாப்பிடலாமா? அதற்கு என்ன ஆதாரம்? எழுதலாம், பேசலாம், தூங்க‌லாம் என்பதற்கெல்லாம் என்ன ஆதாரம்?'

என்னவொரு அறிவுப் பூர்வமான(?) கேள்விகள் பாருங்கள்! இப்படி ஏதாவது ஒன்றை சொல்லி மக்களைக் குழப்பினாலும் நல்லறிவுள்ள மக்க‌ளுக்கு இவையெல்லாம் புரியவே செய்யும். இவர்களுடைய இதுபோன்ற வாதங்களை வைத்தே அவர்களின் (மார்க்க அறிவின்) தரத்தை புரிந்து, சிந்தித்து, அவர்களை புறந்தள்ளி, நேர்வழியில் வந்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு, அல்ஹம்துலில்லாஹ்!

ஆக, பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் தவறாக விளங்கிக்கூறும் தப்பான விளக்கங்களும் அல்லாமல், பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, 'பாருங்கள், இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது' என்று கூறி உங்களையும் வழிகெடுக்கிறார்களே, கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் பின்னால் செல்லாமல் அல்லாஹ்வையும், மறுமையையும் அஞ்சி நீங்கள்தான் விழிப்பாக இருக்கவேண்டும் சகோதர, சகோதரிகளே! ஏனெனில், பின்வரும் குர்ஆன் வசனத்தை பாருங்கள்!

"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் அந்நாளில், நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக்கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! எனவும் கூறுவார்கள்". (அல்குர்ஆன் 33:66-68 )

அல்லாஹ் இவர்களையும் காப்பாற்றி, நம்மனைவரையும் இறுதிவரை நேர்வழியில் செலுத்துவானாக!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது