ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவம் என்ன


ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவம் என்ன

இன்றைய நவீன உலகத்தில் மனிதன் எதை செய்தாலும் குறுக்கு வழியில் மிக எளிதில் செய்திட நினைக்கின்றான் அதே வழியில் சொர்க்கத்தை அடைவதற்காகவும் அமல்கள் குறுக்கு வழியில் செய்து அடைந்து விடலாம் என்று எண்ணி தொழுகை நோன்பு ஜக்காத் ஹஜ் இவைகளை தவிர்த்து இந்த ஷஃபான் மாதத்தில் சில குறுக்கு அமல்களை செய்து சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கின்றான்.?

 அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:

இஸ்லாமிய வருட கலண்டரில் ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அற்கு அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். அந்தவகையில் ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொhள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. ஆகவே

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஷஃ‘பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை‘ என்று கூறிய போது, நபியவர்கள், “மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ’பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என கூறினார்கள் (- நஸயி, அஹ்மத்).

நபி (ஸல்) மற்ற எல்லா மாதங்களையும்விட – ரமலானுக்கு அடுத்தபடியாக – ஷஃ’பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

“நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ‘பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.(அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்), ‘நோன்பை விடவேமாட்டார்களோ‘ என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் ‘நோன்பிருக்க மாட்டர்களோ‘ என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ‘பானாகும். என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம் 1956).

இதற்கு மாற்றமாக ஷஃ’பான் மாதத்தில், பிறை 15இல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு ‘பித்அத்’தான காரியமாகும்.

ரமளானுக்கு ஒரிருநாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம் (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்

ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

மாதந்தோறும் 13,14,15, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)நூல்: புகாரி 3419

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று நபி (ஸல்) அவர்கள் அதிம் அழுத்தம் கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும், அதில் புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருவதாகும்.

அதேபோல் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாகக் குர்ஆன் ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

பராஅத் இரவும், வணக்கங்களும் 

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்

பராஅத் இரவு சிறப்பு வாய்ந்தது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை

ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவே பராஅத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ சூட்டியதற்கு சரியான சான்றெதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் வரம் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஹதீஸ்கலை அறிஞர் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்)  இமாம்களான அஹ்மத் (ரஹ்), இப்னு முஈன் (ரஹ்)  அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும். கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துஆச் செய்யும் வழக்கமும் இருக்கிறது,  இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான  ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமனவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்து கூறுகின்றனர்.

பராஅத் என்றொரு இரவு இல்லை. அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என இவ்வளவு தெளிவுபடுத்தப்பட்டபின்னரும், அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸுறா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது எவ்வளவு தவறானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட பயன்கள் மூன்று விதமான உத்தரவாதங்கள் ஆகும். இத்தகைய உத்தரவாதங்களை அல்லாஹ்வோ, அவனது தூதரோதான் வழங்க முடியும். அவ்விருவரில் ஒருவர் வழங்குவதானால் அது அல்குர்ஆனிலோ அல் ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று யாஸீன் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவுறுத்தியதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

ஆயுளை நீடிப்பதும், ரிஸ்க்கை விஸ்தீரனமாக்குவதும், பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ் செய்ய வேண்டியவைகளாகும். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இத்தகைய உத்தரவாதங்களை மனிதர்கள் வழங்குவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையீடு செய்வது ஆகும்.

மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பது

ஷஃ’பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் கத்தம் – ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துஆக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ஆம் நாளை, ‘ஷப்-ஏ-பராஅத்’ எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகின்றார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் சிலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின், ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். ‘ஷப்-ஏ-பராஅத்’ இல் உள்ள  ‘ஷப்’ என்பது அரபிச் சொல் கிடையாது; ‘இரவு’ என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். ‘ஏ’காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு ‘ஷப்-ஏ-பராஅத்’ என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்துவிட்டனர். ஆனால் இது நபி (ஸல்) மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்  (புகாரி 7306, முஸ்லிம் 3242).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும், நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:

அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை),

அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி),

ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம் 3083. அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி (ஸல்) காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்), நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்காக துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல; துஆச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்துவர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் தாராது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நம் மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நம் ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ’பான் மாதத்தை, பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது