ஸபர் மாதம் பிறை 27 இரவில் நபி (ஸல்) ஹிஜ்ரத் பயணம் மக்காவில் இருந்து குபா வழியினிலே

 


இஸ்லாமிய வரலாற்றுத் தடயம் நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 27 இரவில், ஹிஜ்ரத் பயணம், 

மக்காவில் இருந்து

 குபா வரைக்கம்,!


வீட்டிலிருந்து குகை வரை,!
நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர்.

குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர்’ மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள். அக்குகைக்கு வரலாற்றில் ‘ஸவ்ர் குகை’ என்று கூறுகின்றனர்.

இருவரும் குகைக்குள்,!

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது” என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், ‘நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!’ என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) “அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது” என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)

இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் குகையில் தங்கியிருந்தனர். (ஃபத்ஹுல் பாரி)

அபூபக்ர் (ரழி) மகனார் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் புத்திசாலியான நல்ல அறிவுள்ள வாலிபராக இருந்தார். அவ்விருவருடன் தங்கிவிட்டு, இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி, விடிவதற்குள் மக்கா வந்து விடுவார். அவ்விருவரைப் பற்றி ஏதாவது செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக்கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் அடிமையான ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்து விட்டு மாலை சாய்ந்தவுடன் அவ்விருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து தருவார். இவ்வாறு மூன்று இரவுகள் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். (ஸஹீஹுல் புகாரி)

அதிகாலையில் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரழி) ‘ஸவ்ர்’ குகையிலிருந்து வெளியேறி மக்காவிற்குச் செல்லும்போது ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) தனது ஆடுகளை அப்துல்லாஹ்வின் காலடித் தடங்கள் மீது ஓட்டிச் சென்று அவற்றை அழித்துவிடுவார். (இப்னு ஹிஷாம்)

“நபி (ஸல்) தப்பித்துவிட்டார்கள்’ என்ற செய்தியைக் காலையில் குறைஷிகள் உறுதியாக தெரிந்து கொண்டபோது அவர்களுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அலீ (ரழி) அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியாக பதில் கூறாததால், அவர்களை கடுமையாக அடித்து கஅபாவுக்கு இழுத்து வந்து சில மணி நேரம் அங்கேயே பிடித்து வைத்திருந்தனர். (தாரீக் தபரீ)

அலீ (ரழி) அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காததால் அபூபக்ரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து வெளியே வந்த அபூபக்ரின் மகளார் அஸ்மாவிடம் “உனது தந்தை எங்கே?” என்றனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தெரியாது” என்றார் அவர். இந்தப் பதிலைக் கேட்ட தீயவன் ‘அபூஜஹ்ல்“, அவரது கன்னத்தில் அறைந்தான். இதனால் அவன் காது தோடு அறுந்து கீழே விழுந்தது. (இப்னு ஹிஷாம்)

உடனே, அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். “நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவல் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும் இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரிஅவருக்கு இந்தப் பரிசுஉண்டு” என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி)

அப்போது கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடி நிபுணர்கள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் சல்லடை போட்டு மலைகள், பாலைவனங்கள், காடுகள், பள்ளத்தாக்குகள் என அனைத்து இடங்களிலும் வலை வீசி தேடினர். ஆனால், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவர்களை அவர்களால் எப்படி கண்டுகொள்ள முடியும்?

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். இதைப் பற்றி அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே” என்று கூறினேன். நபி (ஸல்) “அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்.” என்றும் (மற்றொரு அறிவிப்பில்) “அபூபக்ரே! அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கும் இருவரைப் பற்றி உமது எண்ணமென்ன! (அப்படியிருக்க நாம் ஏன் பயப்படவேண்டும்?)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பி விட்டனர்.

மதீனாவின் வழியினிலே,!

குறைஷிகளின் வேகம் அடங்கியது அவர்களின் தேடும் வேட்டை தணிந்தது நபி (ஸல்) அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்ற அவர்களது கோபத் தீ அணைந்தது தொடர்ந்து மூன்று நாட்கள் அலைந்து திரிந்து தேடியும் எவ்விதப் பலனுமில்லாமல் போனது. இதை உணர்ந்த பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது தோழருடன் குகையிலிருந்து வெளியேறி மதீனா செல்ல ஆயத்தமானார்கள்.

மதீனா வரை தங்களுக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் லைஸி என்பவரை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் கூலிக்குப் பேசியிருந்தார்கள். இவர் முஸ்லிமாக இல்லாமல் குறைஷிகளின் மதத்தை பின்பற்றியவராக இருந்தும், இவர்மீது நம்பிக்கை கொண்டு தங்களது இரண்டு ஒட்டகங்களையும் அவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும், மூன்று இரவுகள் கழித்து ‘ஸவ்ர்’ மலையின் குகைக்கு வருமாறு அவரிடம் நேரம் குறித்திருந்தார்கள்.

ஹிஜ் முதல் ஆண்டு செப்டம்பர் 16 கி.பி. 622, ரபீவுல் அவ்வல் முதல் பிறை திங்கள் இரவு அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் இரண்டு ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்து சேர்ந்தார். இதற்கு முன் நபி (ஸல்) அபூபக்ரிடம் அவரது வீட்டில் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதோ எனது இரண்டு ஒட்டகங்களில் சிறந்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “அதற்குரிய கிரயத்திற்கு பகரமாக நான் அதை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்கள். அபூபக்ரின் மகளார் அஸ்மா (ரழி) இருவருக்கும் பயண உணவை ஒரு துணியில் மடித்து எடுத்து வந்தார்கள். ஆனால், அதைத் தொங்க விடுவதற்குக் கயிறு எடுத்துவர மறந்து விட்டார்கள்.

அவ்விருவரும் பயணமானபோது உணவு மூட்டையை தொங்கவிட கயிறு இல்லாததால் தங்களது இடுப்பிலுள்ள கயிற்றை அவிழ்த்து அதை இரண்டாகக் கிழித்து ஒன்றின் மூலம் உணவு மூட்டையை வாகனத்தில் கட்டிவிட்டு, மற்றொன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள். எனவேதான் அஸ்மாவிற்கு “தாத்துன் நித்தாகைன்” -இரட்டைக் கச்சுடையாள்- என்று பெயர் வந்தது. (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் தூதரும் அபூபக்ரும் அவர்களுடன் ஆமிர் இப்னு புஹைராவும் பயணமானார்கள். வழிகாட்டியான அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் கடற்கரை வழியாக அவர்களை அழைத்துச் சென்றார். யாரும் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக முற்றிலும் மாறுபட்ட வழியில் அழைத்துச் சென்றார். முதலில் தெற்கு நோக்கி யமன் நாட்டை நோக்கி செல்லும் பாதையில் சென்று, பின்பு கடற்கரையை நோக்கி மேற்கு வழியாக சென்று, பின்பு அங்கிருந்து செங்கடலின் கரையை நோக்கி வடக்குப் பக்கமாக அழைத்துச் சென்றார்.

நபி (ஸல்) வழியில் எந்தெந்த இடங்களைக் கடந்து சென்றார்கள் என்பது பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதைப் பார்ப்போம்:

இப்னு உரைகித், நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் மக்காவின் தெற்குத் திசையில் அழைத்துச் சென்று கடற்கரை வந்தவுடன், ‘உஸ்ஃபான்’ என்ற ஊரின் எல்லை வழியாக சென்று ‘அமஜ்’ என்ற ஊரின் எல்லையை அடைந்தார். பின்பு அங்கிருந்து குறுக்கு வழியில் ‘குதைத்’ என்ற ஊருக்கு வந்து, பின்பு ‘கர்ரார்“, அங்கிருந்து ‘ஸனியத்துல் மர்ரா“, அங்கிருந்து ‘லிக்ஃப்“, அங்கிருந்து ‘லிக்ஃப்’ எனும் காட்டு வழியாக அழைத்துச் சென்றார். பின்பு ‘மிஜாஜ்’ காட்டு வழியாக ‘மிஜாஹ்’ வந்து, பின்பு ‘துல்குழுவைன்“, பின்பு ‘தீ கஷ்ர்“, ‘ஜதாஜித்“, ‘அஜ்ரத்’ வழியாக வந்து அங்கிருந்து ‘திஃன்’ காட்டு வழியாக ‘அபாபீத்’ சென்றடைந்து பின்பு அங்கிருந்து ‘ஃபாஜா’ சென்றடைந்து ஃபாஜாவிலிருந்து ‘அர்ஜ்’ என்ற இடத்தில் தங்கி பின்பு ‘ரகூபா’ என்ற ஊரின் வலது புறம் உள்ள ‘ஸனியத்துல் ஆம்ர்’ என்ற ஊரின் வழியாக சென்று ‘ஃம்’ என்ற பள்ளத்தாக்கில் இறங்கி குபாவுக்கு அழைத்துச் சென்றார். (இப்னு ஹிஷாம்)

வழியில் நடந்த சம்பவங்களில் சிலவற்றை நாம் பார்போம்:

1) அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அன்று இரவும் அடுத்த நாளும் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மதிய நேரத்தை அடைந்தவுடன் வெயிலின் காரணமாக, பாதை ஆள் நடமாட்டமின்றி இருந்தது. மிகப் பெரிய உயரமான பாறை ஒன்று தென்படவே அதன் அருகில் சென்றோம். நல்ல நிழல் இருந்தது. நபி (ஸல்) தூங்குவதற்காக அங்கு இடத்தைச் சரிசெய்து விரிப்பை விரித்தேன். பின்பு “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தூங்குங்கள். நான் உங்களைச் சுற்றி பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) தூங்கிக் கொண்டார்கள்.


நான் அவர்களை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆட்டிடையர் தன்னுடைய ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு நிழல் தேடி அப்பாறையை நோக்கி வந்தார். நான் அவரிடம் “நீ யாரின் அடிமை?” என்று கேட்டவுடன் அவர் “மக்காவைச் சேர்ந்த அல்லது மதீனாவைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் கூறி அவருடைய அடிமை” என்று கூறினார். நான் அவரிடம் “உனது ஆட்டு மந்தையில் பால் கிடைக்குமா?” என்றேன். அவர் “கிடைக்கும்” என்றார். “கறந்து தரமுடியுமா?” என்றேன். அவர் “முடியும்” என்றார். பின்பு ஓர் ஆட்டைப் பிடித்து வரவே, நான் அவரிடம் “மண், முடி அசுத்தத்திலிருந்து மடியை சுத்தம் செய்துகொள்” என்று கூறினேன். அவர் தடிப்பமான பாத்திரத்தில் கொஞ்சம் பால் கறந்து கொடுத்தார். நான் நபி (ஸல்) தண்ணீர் குடிப்பதற்காகவும், ஒளு செய்வதற்காகவும் எடுத்து வந்த சிறிய பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரைப் பாலில் கலந்து, பால் குளிர்ந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப மனமில்லாததால் அவர்கள் விழிக்கும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அவர்கள் விழித்தவுடன் “அல்லாஹ்வின் தூதரே! இந்த பாலைக் குடியுங்கள்” என்றேன். நான் திருப்தியடையும் வரை நபி (ஸல்) பாலைக் குடித்தார்கள். பின்பு நபி (ஸல்) “என்ன! பயணிக்க இன்னும் நேரம் வரவில்லையா?” என்று கேட்கவே “ஆம்! நேரம் வந்துவிட்டது” என்று கூறினேன். பின்பு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். (ஸஹீஹுல் புகாரி)

2) அபூபக்ர் (ரழி) பொதுவாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் செல்லும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் வயோதிக தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) வாலிப தோற்றமுடையவர்களாகவும் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாகவும் இருந்தார்கள். அப்போது இடையில் யாராவது அபூபக்ர் (ரழி) அவர்களைப் பார்த்து “உனக்கு முன் செல்பவர் யார்?” என்று கேட்டால் “எனக்கு வழி காட்டுபவர்” என்று கூறுவார்கள். கேட்டவர் பயணப் பாதையை காட்டக் கூடியவர் என்று விளங்கிக் கொள்வார். அபூபக்ர் (ரழி) அவர்களோ “நன்மைக்கு வழி காட்டுபவர்” என்ற பொருளை மனதில் எண்ணிக் கொள்வார்கள். (ஸஹீஹுல் புகாரி)

3) இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் குஜாம் கிளையைச் சேர்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் இரண்டு கூடாரங்களைக் கண்டார்கள். அந்தக் கூடாரங்கள் மக்காவிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ள ‘குதைத்’ என்ற ஊரின் எல்லையில் ‘முஷல்லல்’ என்ற இடத்தில் இருந்தது. இந்த ‘உம்மு மஅபத்’ வீரமும், துணிவுமிக்கவர் ஆவார். இவர் எப்போதும் தனது கூடாரத்தின் வெளியில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடந்து செல்பவர்களுக்கு உணவும், நீரும் வழங்கி வருவார். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் “உன்னிடம் எதுவும் சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஏதாவது இருப்பின் நான் உங்களுக்கு விருந்தளிப்பதில் குறைவு செய்ய மாட்டேன். ஆட்டு மடியிலும் பால் இல்லையே! இந்த ஆண்டு மிகப் பஞ்சமாக இருக்கின்றது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் பார்வை கூடாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆட்டின் மீது பட்டது. “உம்மு மஅபதே! இது என்ன ஆடு?” என்று கேட்டார்கள். அவர் “இது ஆட்டு மந்தையுடன் சேர்ந்து மேய்ந்துவர முடியாத அளவுக்கு பலவீனமான ஆடு” என்றார். “அது பால் தருமா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அது மிக மெலிந்ததாயிற்றே!” என்று அப்பெண் கூறினார். “நான் அந்த ஆட்டில் பால் கறந்துகொள்ள எனக்கு அனுமதியளிக்கிறாயா?” என்று நபி (ஸல்) கேட்க, “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! அதில் பால் இருக்கிறது என்று நீங்கள் கருதினால் தாராளமாக கறந்து கொள்ளுங்கள்” என்றார் அப்பெண்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறி அல்லாஹ்விடம் பிரார்தித்தார்கள். அல்லாஹ்வின் அருளால் ஆட்டின் மடி பாலால் நிரம்பி சொட்டியது. ஒரு நடுத்தரமான பாத்திரத்தை எடுத்துவரக் கூறி அதில் பால் கறந்தார்கள். பாத்திரம் நிரம்பவே முதலில் அப்பெண்மணிக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அவர் குடித்து தாகம் தீரவே பின்பு தனது தோழர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களுக்குப் பின்பு நபி (ஸல்) குடித்தார்கள். பின்பு மற்றொரு முறை அந்த பாத்திரம் நிரம்பப் பால் கறந்து அப்பெண்மணியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவர் அபூ மஅபத், மெலிந்த நடக்க இயலாத பலவீனமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கு வந்தார். அங்கு பால் கறக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்து “இந்தப் பால் உனக்கு எங்கிருந்து கிடைத்தது? வீட்டில் பால் சுரக்கும் ஆடு இல்லை மற்ற ஆடுகளும் தூரமாக இருந்தன. எப்படி உனக்கு பால் கிடைக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு அப்பெண் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு நல்ல பாக்கியம் பெற்ற மனிதர் இங்கு வந்தார். அவர் இப்படி இப்படியெல்லாம் பேசினார். அவன் நிலை இப்படி இப்படி இருந்தது” என்று வருணித்தார். அதற்கு அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் தேடும் மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்று கூறி அவரைப் பற்றி முழுமையாக எனக்கு விவரித்துக் கூறு” என்றார்.

அப்பெண், நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகளை கேட்பவர் கண்முன் காண்பது போன்று வருணித்துக் கூறினார். (இன்ஷா அல்லாஹ்! இந்த நூலின் இறுதியில் அந்த வருணனையை நாம் காண்போம்.) அப்போது அபூ மஅபத் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் குறைஷிகள் தேடும் மனிதர்தான். குறைஷிகள் இவரைப் பற்றி ஏராளம் கூறியிருக்கின்றனர். நான் அவருடன் தோழமை கொள்ள வேண்டுமென்று திட்டமாக நினைத்திருந்தேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் அதைச் செய்வேன்” என்றார்.

இந்நேரத்தில், மக்காவில் உள்ளவர்களோ உயர்ந்த சப்தம் ஒன்றைச் செவிமடுத்தார்கள். ஆனால், அந்த சப்தம் கொடுப்பவரை அவர்கள் பார்க்க முடியவில்லை. அந்த சப்தமாவது:

“அர்ஷின் அதிபதியான அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்!
உம்மு மஅபதின் கூடாரத்தில் தங்கிச் சென்ற இரு தோழர்களுக்கு.
அவர்கள் நலமுடனே தங்கி நலமுடனே போனார்கள்.
முஹம்மதுக்கு தோழராகும் பாக்கியம் பெற்றவர் வெற்றியடைந்தார்.
குஸை வம்சமே! என்ன கைசேதம்! தலைமையையும் சிறப்பையும்
உங்களை விட்டுவிட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கி விட்டான்.
கஅபு குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் பல! அவருடைய திருமதியின் இல்லம் அருமையானது!
அது இறைவிசுவாசிகளுக்கு தங்குமிடமானது!
உங்கள் சகோதரியிடம் ஆடு, பாத்திரம் பற்றி வினவுங்கள்!
நீங்கள் ஆட்டிடம் கேட்டால் அதுவும் சான்று பகரும்!”

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது மக்காவின் கீழ் பகுதியிலிருந்து ஒரு ஜின் இக்கவிதைகளைப் பாடியது. மக்கள் சப்தம் வரும் திசையை நோக்கி சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். ஆனால் பாடுவது யார்? என்று தெரியவில்லை. பின்பு அந்த சப்தம் மக்காவின் மேல்புறத்தின் வழியாக மறைந்துவிட்டது. அந்த ஜின்னின் சப்தத்தைக் கேட்டபோது நபி (ஸல்) மதீனாவை நோக்கி சென்றிருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். (ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

4) வழியில் சுராக்கா இப்னு மாலிக் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் கைது செய்ய வேண்டும் என்று பின்தொடர்ந்தார். இதைப் பற்றி சுராக்கா கூறுவதை நாம் கேட்போம்: நான் எனது கூட்டத்தினராகிய முத்லஜின் அவையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் விரைந்து வந்து “கடற்கரையில் சில மனிதர்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களுமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார். அது உண்மையில் அவர்கள்தான் என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல் “நீ பார்த்தது அவர்களல்ல! நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் கண்முன் சென்ற இரண்டு நபர்களைத்தான் நீயும் பார்த்திருக்கிறாய்! நீ கூறுவது போன்று அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களும் அல்லர்” என்று கூறி மழுப்பினேன். பிறருக்கு சந்தேகம் வராமலிருக்க சபையில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது போல் இருந்துவிட்டு எனது வீட்டுக்கு வந்தேன்.

எனது அடிமைப் பெண்ணிடம் எனது குதிரையைத் தூரத்தில் உள்ள ஒரு மேட்டுக்குக் கொண்டு வந்து என்னை எதிர்பார்த்திருக்கும்படி கூறினேன். பின்பு எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப் புறமாக வெளியேறி அந்த ஈட்டியை பூமியில் தேய்த்தவனாக எனது குதிரையில் ஏறினேன். நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது “வேண்டாம்” என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோ அதிகம் அதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் “உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்” என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் “எங்களின் செய்திகளை மறைத்துவிடு” என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூபக்ர் (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரிகள் எங்களை வலைவீசித் தேடினர். ஆனால், சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமைத் தவிர வேறு எவராலும் எங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை. சுராக்கா எங்களுக்கு அருகாமையில் வந்தவுடன் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நம்மை தேடி வந்து விட்டார்கள்” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

“நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” (அத்தவ்பா 9:40)

என்று கூறினார்கள்.

சுராக்கா எங்களை விட்டு திரும்பியபோது, மக்கள் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் உங்களுக்காக நான் இங்கு எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன். நீங்கள் இங்கு தேடவேண்டிய அவசியமில்லை என்று கூறி மக்களைத் திசை திருப்பினார். காலையில் நபி (ஸல்) அவர்களை ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தவர் மாலையில் நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலராக மாறினார். (ஜாதுல் மஆது)

5) பயண வழியில் நபி (ஸல்) புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமியை சந்தித்தார்கள். அவருடன் அவருடைய கிளையினரில் எண்பது குடும்பங்களையும் சந்தித்தார்கள். அவருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறவே அவரும் அவரது கூட்டத்தாரும் இஸ்லாமைத் தழுவினர். பின்பு நபி (ஸல்) இஷா தொழுகையைத் தொழ வைக்க, அவர்கள் அனைவரும் இஷா தொழுதார்கள். புரைதா (ரழி) தங்களது கூட்டத்தினடமே தங்கியிருந்து விட்டு உஹுத் போர் நடந்த பின்பு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

புரைதாவின் மகன் அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கின்றார்: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நல்ல பெயர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், சகுனம் பார்க்க மாட்டார்கள். நபி (ஸல்) மதீனாவை நோக்கி ஹிஜ்ரா சென்று கொண்டிருக்கும்போது எனது தந்தை புரைதா தங்களது குடும்பத்தினர் பனூ சஹ்முடன் எழுபது வாகனங்களில் வந்து கொண்டிருந்தார். அவரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் “நீர் எந்தக் கிளையைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அவர் “அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அபூபக்ரிடம் “நாம் பாதுகாப்பு பெற்றுவிட்டோம்” என்றார்கள். (ஏனெனில் ‘அஸ்லம்’ என்றால் ‘மிகுந்த பாதுகாப்புப் பெற்றவர்’ என்பது பொருள்) பின்பு நபி (ஸல்), அவரிடம் “நீர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். அவர் “சஹம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார். நபி (ஸல்)அபூபக்ரிடம் “உமது அம்பு வெளியாகிவிட்டது” (எதிரிகளிடமிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம்) என்று கூறினார்கள்.

6) நபி (ஸல்) வழியில் அஸ்லம் கிளையைச் சேர்ந்த அபூஅவ்ஸ் தமீம் இப்னு ஹஜரை அல்லது அபூ தமீம் அவ்ஸ் இப்னு ஹஜரைச் சந்தித்தார்கள். அவர் ‘அர்ஜ்’ என்ற இடத்தில் ஜுஹ்ஃபா, ஹர்ஷா என்ற இரண்டு மலைகளுக்கிடையில் தனது கொழுத்த ஒட்டகங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் ஒரே ஒட்டகத்தில் இருந்தார்கள். காரணம், நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அபூபக்ர் (ரழி) அவர்களைத் தவிர மற்ற இருவரும் அவர்களுடைய ஒட்டகங்களுடன் வர தாமதமாகி விட்டதால் இவர்கள் இருவரும் ஒரே ஒட்டகத்தில் வந்தார்கள். அப்போது அபூஅவ்ஸ் தனது ஒட்டகங்களில் நல்ல ஆண் ஒட்டகை ஒன்றை அபூபக்ருக்கு வழங்கி, அதில் பயணிக்க வைத்தார்கள். பின்பு தனது அடிமை மஸ்வூதையும் அவர்களுடன் வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனது அடிமையிடம் “யாரும் செல்லாத தனி வழியில் இவர்களை அழைத்துச் செல். இவர்களை விட்டு எங்கும் நீ பிரிந்து சென்றுவிட வேண்டாம்” என்று கூறினார். (அஸதுல் காபா)

அந்த அடிமை நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரழி) அவர்களையும் பத்திரமாக அழைத்து வந்து மதீனாவில் சேர்த்தார். பின்பு நபி (ஸல்) அந்த மஸ்வூதிடம் “உமது எஜமானரிடம் தனது ஒட்டகங்களின் கழுத்துகளில் இரண்டு வளையங்களைக் கொண்டு அடையாளமிடச் சொல்!” என்று கூறி அவரை அவரது எஜமானரிடம் அனுப்பி வைத்தார்கள். உஹுத் போர் நடந்தபோது மக்காவிலிருந்து இணைவைப்பவர்கள் வரும் செய்தியை ‘அவ்ஸ்’ தனது அடிமை மஸ்வூதை அர்ஜிலிருந்து கால் நடையாகவே அனுப்பி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து வரச் செய்தார். உஹுத் போர் நடந்து நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பியவுடன் இவர் இஸ்லாமை ஏற்று அர்ஜிலேயே வசித்து வந்தார். (அஸதுல் காபா)

7) ‘பத்தன் ஃம்’ என்ற இடத்தில் ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜுபைர் (ரழி) அவர்களையும், அவர்களுடன் இருந்த மற்ற முஸ்லிம் வியாபாரிகளையும் சந்தித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ருக்கும் வெண்மையான ஆடைகளை ஜுபைர் அணிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)  

நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ‘ஹர்ரா“” என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் “ஓ அரபுகளே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!” என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க ‘ஹர்ரா’ நோக்கி ஓடினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும், வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும், ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று “வருக! வருக!” என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில்,

நிச்சயமாக அல்லாஹ் அவரைப் பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 66:4)

என்ற வசனம் இறங்கியது.

உர்வா இப்னு ஜுபைர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை வரவேற்றபோது அவர்கள் மக்களுடன் வலது புறமாக சென்று அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாருடன் தங்கினார்கள். அது ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் திங்கட்கிழமையாகும். நபி (ஸல்) அமைதியாக அமர்ந்து கொள்ளவே அபூபக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டார்கள். அன்சாரிகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராதவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறுவதற்காக வந்தபோது அபூபக்ரை நபியென நினைத்து அவருக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மீது வெயில் படவே அபூபக்ர் தன்னுடைய போர்வையால் நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தந்தார்கள். அப்போதுதான் நபி (ஸல்) யார்? என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபி (ஸல்) குபாவில் குல்ஸும் இப்னு ஹத்ம்’ என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். சிலர் ஸஅது இப்னு கைஸமா வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், முந்திய கூற்றே வலுவானதாகும்.

அலீ இப்னு அபூதாலிப் (ரழி) மக்காவில் மூன்று நாள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற அமானிதங்களை” உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கால்நடையாகவே மதீனா புறப்பட்டார்கள். பின்பு, குபா வந்தடைந்து நபி (ஸல்) தங்கியிருந்த குல்ஸும் இப்னு ஹத்ம் வீட்டில் தங்கினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபி (ஸல்) குபாவில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள்.குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். 

 ஐந்தாவது நாள், அதாவது நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 13  வெள்ளிக்கிழமை அன்று பகல் கி.பி. 622 செப்டம்பர் 28ல்  அல்லாஹ்வின் உத்தரவு வரவே அங்கிருந்து புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரழி) அமர்ந்திருந்தார்கள்.

நபி (ஸல்) தான் வரும் செய்தியை தனது தாய்மாமன்மார்களுக்கு, அதாவது, நஜ்ஜார் கிளையினருக்கு சொல்லி அனுப்பினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக வாட்களை அணிந்து வந்தனர். அவர்கள் சூழ்ந்து செல்ல, நபி (ஸல்) மதீனா நோக்கி பயணமானார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

மதீனாவில்

ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இதற்கு முன் ‘எஸ்ப்’ என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து ‘மதீனத்துர் ரஸுல்’ - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது. இதையே சுருக்கமாக இன்று ‘அல்-மதீனா’ என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

“நமக்கு முழு நிலா தோன்றியது.
ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,
அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்
நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.
எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!
பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”

அன்சாரிகள் மிகுந்த செல்வ செழிப்புடையவர்களாக இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தினால் ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென ஆசைபட்டனர். ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது நபியவர்களின் வாகனக் கயிற்றை பிடித்துக்கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! பாதுகாப்பும், ஆயுதமும், படைபலமும், வீரர்களும் நிறைந்த எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) தன்னை அழைத்தவர்களிடம் “வாகனத்திற்கு வழிவிடுங்கள். அது பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறிக்கொண்டே வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனம் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. இறுதியில், தற்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கும் இடத்தில் மண்டியிட்டுக் கொண்டது. ஆனால், நபி (ஸல்) அதிலிருந்து இறங்கவில்லை. பின்பு சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம் எழுந்து சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தது பின்பு முதலில் மண்டியிட்ட அதே இடத்தில் மீண்டும் வந்து மண்டியிட்டு அமர்ந்துதது.

தங்கள் ஒட்டகத்திலிருந்து நபி (ஸல்) இறங்கினார்கள். மேலும், அந்த இடம் நபி (ஸல்) அவர்களின் தாய்மாமன்களாகிய நஜ்ஜார் கிளையினருக்கு சொந்தமானதாகும். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் அவர்களின் தாய்மாமன்களின் வீட்டிலேயே தங்குவதற்கு அருள் புரிந்தான். நஜ்ஜார் கிளையினரில் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் எங்களது வீட்டில் தங்க வேண்டும்’ என்று அழைத்துக் கொண்டிருக்கையில் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களை தங்களது வீட்டிற்குள் எடுத்துச் சென்று விட்டார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) “மனிதன் அவனது சாமான்களுடன்தானே இருக்க முடியும்” என்று மற்றவர்களிடம் கூறினார்கள். அஸ்அத் இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் விருப்பப்படி நபி (ஸல்) அவர்களின் வாகனம் அவரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) “நமது உறவினர்களின் வீடுகளில் எது நெருக்கமாக இருக்கிறது” என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் “அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது வீடு. இதுதான் எனது வீட்டு வாயில்” என்று கூறினார்கள். நபி (ஸல்) “சரி! எழுந்து சென்று படுக்கும் இடத்தை சரிசெய்யுங்கள்” என்று கூறினார்கள். “ரஸுலுல்லாஹ்வே! எல்லாம் தயார், அல்லாஹ்வின் பரக்கத்துடன் -அருள் வளத்துடன்- நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்” என்று அபூ அய்யூப் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


நூல் “ரஹீக்” - ( ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி )

தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

“ஜஸாக்கல்லாஹு ஹைரா

Comments

Popular posts from this blog

03 - வது மாதம் ரபீவுல் அவ்வல் லில் நடைபெற்ற போர்களைப் பற்றி

ஜனாஸா தொழுகை உடைய முறை

துல்ஹஜ் மாதா அரஃபா நோன்பு எப்போழுது