துல்ஹஜ் மாதம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் மறைவு நினைவு நாள்,
இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு
. அமீருல் முஃமினீன்
(நம்பிக்கையாளர்களின் தளபதி)
கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
அவர்களின் மறைவு நினைவு நாள்,
ஹஜ்ஜின் கடைமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளியில் ஒருநாள் துல்ஹஜ் மாதத்தின் 26ம் பிறை மறைந்து, 27ம் பிறை காலை பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத் தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல் வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான். திடீரென பாய்ந்து கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து மூன்று முறைகள் குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது. சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு கீழே சாய்ந்தார்கள். அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு அந்த வெறியன் பைரோஸை பிடிக்க பாய்ந்தார்கள். அந்த வெறியன் பைரோஸ் தப்பிக்க தன் குறுவாளை சுழற்றிய படியே ஓடினான். அதன் தாக்குதல் 13 ஸஹாபாக்களின் மேல் பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியாக ஓர் ஈராக்கிய வீரர் முரட்டுத் துணியை அவன் முகத்தின் மேலாக வீசி அவனை பிடித்து விட்டார். இனி தான் தப்பிக்க முடியாதென உணர்ந்த அவன் அந்த குறுவாளாலேயே தன்னையும் குத்தி தற்கொலை புரிந்துகொண்டான். பின்னர் மயக்க நிலையில் இருந்த கலீஃபா அவர்கள் வீடு சேர்க்க பட்டார்கள். மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்த கலீஃபா அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுதுக்கொண்டார்கள். “தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை” என்றார்கள் கலீஃபா.
மூன்று நாட்களுக்கு பின் கலீஃபா அவர்களின் புனித ஆன்மா தன் உடற்கூட்டை விட்டு விடைபெற்று கொண்டது. (இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜி'உன். ) அப்பொழுது அவர்களுக்கு வயது 63. ஹிஜ்ரி 23ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தின் கடைசி நாளோடு உலகம் அதற்குப்பின் இனி கனவிலும் காணமுடியாத ஒரு பொற்கால வரலாறு மூடப்பட்டு விட்டது.
அல்லாஹ் கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அருள்புரிவானாக!!
Comments
Post a Comment